வணக்கம் வருக வருக என பூவரசு வரவேற்கிறது

ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ



வாழ்வெனும் கடலை
மூச்சுமுட்டக் குடி
ஊன் உருக்கு
உள்ளொளி பெருக்கு

மெய்ப்பதம் தேடு
ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை

உலகம் உன்மீது திணித்த
முன் முடிபுகள் அழி
****
நீயென்று கருதிய
நீயழிந்தொழிய
நீயல்லாத நீதான் நீ
****
மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது
மலை பறித்த பள்ளத்தில்
கடல் அள்ளி ஊற்றியது
பூகோளம் தெரியாத பூகம்பம்!
****
ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்

வார்த்தை மாறினால்
வாழ்க்கை மாறும்

முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்

வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்

எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்

உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்

பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்
புதிய நிலத்தில் பதியன்போடுவோம்

புளித்த வார்த்தைகள் மாறும்போது
சலித்த வாழ்க்கையும்
சட்டென்று மாறும்
****
எப்போதெல்லாம் நான்
சாகவில்லையென்பதற்குச்
சாட்சி கோரப்படுகிறதோ

அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும்
****
உடைந்தகுடம் வழியே
வழிந்தோடும் தண்ணீர்
வாழ்வு
ஒவ்வொரு சொட்டும்
உறிஞ்சற்பாலது
****
மொழியாய் முதிர்ந்தது ஒலி
கவியாய் முதிர்ந்தது மொழி
என்னவாய் முதிரும் கவி?

கண்காணாக் கடவுள்
தான்தோன்றியாகுமெனின்
கண்காணும் பிரபஞ்சம்
தான்தோன்றியாகாதா?

உணர்வுள்ள காலை
மரணம்வரப் போவதில்லை
மரணமுற்ற காலை
உணர்விருக்கப் போவதில்லை
சாவுகுறித்தஞ்சுவதேன் சகோதரா?

உண்டாக்கும் அனைத்தையும்
உள்வாங்கும் பூமிக்குத்
தாயெனும் பட்டம் தகுமா?

கேள்விகள் நல்லவை
சூன்யத்தில் பூப்பூப்பவை
வாழ்வைச் சலிக்கவிடாதவை
****
தயிருக்கு வெளியே
வெண்ணெய் திரளாது
வாழ்வுக்கு வெளியே
ஞானம் பிறவாது
****
அடைத்துக்கிடக்கும் ஐம்பூதங்களைத்
திறக்கத்தானே ஐம்புலன்கள்
சாவிகளுக்கே பூட்டுகளிட்டால்
சாத்தியப்படுமா அனுபூதி?
****
ஆளை வீழ்த்தும் பள்ளங்கள் - பல
அவமானங்கள் காயங்கள்
நாளை வருமென அறிந்தாலும் - என்
நடையின் வேகம் நான் குறையேன்

ஞாலம் கருதினும் கைகூடும் - அடி
நானும் அவனும் ஒருகட்சி
காலம் ஒருநாள் சொல்லட்டும் - நான்
கடலை எரித்த





இதனால் சகலமானவர்களுக்கும்

இந்தப் பிரபஞ்சம் முழுக்கக் கொட்டிக் கிடக்கும் வாழ்க்கை அவனைக்கூப்பிடுகிறது. ஆனால், வாழ்க்கைக்கு எதிரான திசையிலேயே அவன் உதிரம் கசியும் கால்களோடு ஓடிக்கொண்டேயிருக்கிறான். தேன் கொள்ளப் போகும் ஈக்களுக்குத் தேனே சமாதியாகிவிடுவது மாதிரி, இந்த நூற்றாண்டுமனிதன் தன் தேவைகளைத் தேடுவதிலேயே ஆயுளைத் தீர்த்து விடுகிறான்.
*****
ஞானத்தின் உச்சம் பேரின்பமென்றால்,
அறியாமையின் உச்சமும் அதுவேதானோ?
*****
அடுத்த கிரகங்களின் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டோமே….
பூமியில் எல்லாம் பார்த்தாகிவிட்டதா?
இன்னும் பார்க்கப்படாத பூக்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.
*****
சட்டங்களைச் சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன;
தர்மங்களை மனோநிலைகள் தீர்மானிக்கின்றன.
*****
இளமையைக் கல்விக் கூடங்களில் தொலைத்துவிட்டு
இதயத்தை விரக்தியில் தொலைத்துவிட்டு
பகலை பூமியில் தொலைத்துவிட்டு
இரவை வானத்தில் தொலைத்துவிட்டு
சின்னச் சின்னக் கனவுகளை
சிகரெட் புகையில் தொலைத்துவிட்டு,
தன்னையே தனக்குள் தொலைத்துவிட்டு
வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு வாலிபர் கூட்டம்.
*****
அறிவு தன் முயற்சியை நிறுத்திவிட்ட இடத்தில்தான்
மூட நம்பிக்கை முளைக்கிறது.
*****
எந்தக் கலை வாழ்க்கையிலிருந்து வரிக்கப்பட்டதோ
அது ஜீவனுள்ளதாய் பிறக்கும்.
அல்லது,
எந்தக்கலை ஜீவனுள்ளதாய் பிறக்கிறதோ
அது வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதாய் இருக்கும்..
*****
காதல் கவிதைகள் ஒரு மொழியின் சிறகுகள்.
எந்த மொழியிலும் காதல் கவிதையைத் தொட்டால் மட்டும் அதன் உயிர் கைகளில் ஒட்டிக் கொள்கிறது.
காரணம் -
வாழும் காதலர்கள் வாழ்ந்த காதலர்களுக்கு ரத்ததானம் வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*****
தனக்குள் இருக்கும் ஒன்றைத் தனக்கு வெளியே தேடும் தேடல்தான் காதல்.
*****
வாழ்க்கையின் வெற்றிடத்தைக் காதலால் நிரப்புங்கள்.
வாழ்க்கை என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைக் காதல் அகராதியில் கண்டுபிடியுங்கள்.
காதலியின் உள்ளங்கையில் கவிதை எழுதுங்கள்.
காதல் கவிதைகளால் தமிழின் எடையை அதிகரியுங்கள்,
காதல் மனிதனின் வரமல்லவா?
கவிதை மொழியின் உரமல்லவா?
*****
சப்தம் கடந்த சங்கீதம் காண
வார்த்தை கடந்த கவிதைத்தேட
வர்ணம் கடந்த ஓவியம் பேண
மனசை ஆற்றுப்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை: